திங்கள், 31 மார்ச், 2014

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்...தென்பொன்பரப்பி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்...

---------------------------------------------------------------------------

ஆறகழூரில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் ஆத்தூர் டூ சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன சேலத்தில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது தென் பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்..இந்த ஆலயமும் ஆறகழூரை தலை நகராக கொண்டு ஆண்ட வாணகோவரையர்களால் கட்டப்பட்டது..இந்த கோவில் பற்றி சில தகவல்கள்...

----------------------------------------------------------------------------------------------
மூலவர் : சொர்ணபுரீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : உமையாள், சொர்ணாம்பிகை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : தென்பொன்பரப்பி
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு
இந்த தலத்தின் சிறப்பு...

-------------------------------------
இங்கு சிவன் சோடஷ லிங்கம்(16 பட்டைகளுடன் கூடிய லிங்கம்) அருள்பாலிக்கிறார். ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
சொர்ணபுரீஸ்வரர்


 பொது தகவல்கள்..
---------------------------------
இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.

முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள். கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக, இரு லிங்கங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. குருபகவான் சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது.

இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளது. எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளது. ..



 இந்த தலத்தின் பெருமை..
----------------------------------------------
நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்கு சான்று.

காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.

ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.


 சிறப்பம்சம்
---------------------
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சோடஷ லிங்கம் (16 பட்டைகளுடன்) அருள்பாலிக்கிறார் ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம்.
விஞ்ஞானம் அடிப்படையில்: நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது





 லட்சுமி அம்ச அம்பிகை: இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.

காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர். எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.




 தலவரலாறு..
-----------------------
1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனம் பெற்றார். அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.


 இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. "பால நந்தி' என்பது இதன் திருநாமம். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.

ஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி

ஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி

------------------------------------------
ஆறகழூர் பஸ்நிலையத்தில் ஸ்டேசனரி ஸ்டோர் வைத்திருக்கும் அண்ணன் ஹோட்டல் சண்முகம் அவர்கள் இன்று அரைமணி நேரம் முன்பு இயற்கை எய்தினார்..இவருக்கு வயது 75...
இவருக்கு அருள்(அரசு போக்குவரத்து ஓட்டுனர்)
குமரன் ஆசிரியறென்ற மகன்களும் ஜோதி என்ற பெண்ணும் உண்டு..இவரின் பேரன் முக நூலில் உள்ளார்...அன்னாரின் மறைவுக்கு ஆறகழூர் பொது மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்..

ஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும்

 Village   ஊர்   Taluk   Year   Insc_No 
1 Adamankottai அதமன்கோட்டை Dharmapuri 1910 200
2 Agaram அகரம் Krishnagiri 1963-64 289
3 Akkaraipatti Pudupalaiyam அக்கரைப்பட்டிப் புதுப்பாளையம் Rasipuram 1985-86 379
4 Alagarmalai Hills அழகர்மலை Rasipuram 1980-81 224
5 Alattur ஆலத்தூர் Rasipuram 1979-80 261
6 Alavaypatti ஆலவாய்ப்பட்டி Rasipuram 1980-81 225
7 Amaragundi அமரகுண்டி Omalur 1955-56 312
8 Ammankoilpatti அம்மன்கோயில்பட்டி Omalur 1979-80 258
9 Ammapalayam அம்மாபாளையம் Salem 1933-34 155
10 Ananthakavundanpalayam அனந்தகவுண்டன்பாளையம் Rasipuram 1929-30 509
11 Aragalur ஆறகலூர் Attur 1913 408
12 Athimuttil அத்திமுட்டில் Dharmapuri 1926 482
13 Attur ஆத்தூர் Attur 1892 1
14 Attur ஆத்தூர் Attur 1913 403
15 Aypalayam ஆய்பாளையம் Rasipuram 1985-86 380
16 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1939-39 321
17 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1939-40 366
18 Bommasamudram பொம்மசமுத்திரம் Namakkal 1965-66 292
19 Buddireddipatti புட்டிரெட்டிப்பட்டி Harur 1905 155
20 Budimatlu புடிமட்லு Hosur 1911 210

தொல்லியல் நோக்கில் சங்க காலம்

தொல்லியல் நோக்கில் சங்ககாலம்
புலவர். செ.இராசு, ஈரோடு.


தொல்லியல் ஆய்வு
தொல்லியலை Archaeology எனக்கூறுவர். 'ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்' என்பது இதன் பொருளாகும். தொல்லியல் ஆய்வு என்பது பூமிக்குள் புதையுண்டு மறைந்து கிடக்கும், அல்லது மேற்பரப்பிலே காணப்படும் மனித இனத்தோடு தொடர்புடைய பொருள்களையும், அவர்கள் நாள்தோறும் வாழ்க்கையில் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருள்களையும் அகழ்ந்தெடுத்து ஆய்வுசெய்து அவர்களின் பழம்பண்பாடுகளைப் பற்றி உய்த்தறியும் ஓர் ஆய்வாகும்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எடுத்த அரிய பல தொல்பொருட்கள் C14 எனப்படும் கரிப்பகுப்பாய்வு மூலம் அறிவியல் முறைப்படி காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் அவற்றின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுகளில் சங்க இலக்கியங்களோடு தொடர்புடைய பல பெயர்கள் - பொருள்கள் கிடைத்துள்ளன. எனவே அந்தத் தொல்லியல் அகழாய்வுக் காலத்தைச் சங்ககாலம் என்று கொள்ளுவது தவறாகாது.

சங்ககால ஊர்கள்

சங்க இலக்கியம் குறிக்கும் தொன்மையான சில ஊர்களில் முறைப்படி அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அவற்றின் மூலம் அவ்வூர்கள் இருந்தமையும், அங்கு மக்கள் வாழ்ந்தமையும் அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அகழாய்வு நடைபெற்ற ஊர்கள் - அதன் சங்ககாலப் பெயர்

  • அரிக்கமேடு (வீராம்பட்டிணம்) - வீரை முன்துறை (அகம் 206)
  • அழகன்குளம் - மருங்கூர்ப்பட்டினம் (நற் 258)
  • உறையூர் - உறந்தை (புறம் 39)
  • கரூர் - கருவூர், வஞ்சி (புறம் 13,11)
  • காஞ்சிபுரம் - கச்சி (பெரும் 420)
  • காவிரிப்பூம்பட்டினம் - புகார் (பட்டின 173)
  • கொடுமணல் - கொடுமணம் (பதிற் 74)
  • கொற்கை - கொற்கை (அகம் 27)
  • தருமபுரி - தகடூர் (பதிற் 78)
  • திருக்கோவிலூர் - கோவல் (அகம் 35)
  • திருத்தங்கல் - தங்கால் (நற் 386)
  • மதுரை - மதுரை (பரி 11)
  • வல்லம் - வல்லம் (அகம் 336)
  • கொடுங்கலூர் - முசிறி (புறம் 343)

மைய அரசு, தமிழக அரசு, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த தொல்லியல் துறைகள் இவ்வூர்களில் அகழாய்வை மேற்கொண்டன. அரிக்கமேட்டில் அமெரிக்கத் தொல்லியல் துறையினரும் அகழாய்வில் ஈடுபட்டனர். இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னர் மேற்கண்ட ஊர்கள் சிறந்த நாகரிகத்துடன் விளங்கின என்பது அகழாய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வூர்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் சங்ககாலச் சிறப்பும் தொன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கற்படை

சங்ககாலத்திற்கு இணையான தமிழகத் தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பாகக் குறிக்கப்பெறும் தன்மையுடையது பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வாகும். தமிழகமெங்கும் பரவலாகவும். மிகுதியாகவும் காணப்பெறுவது இச்சின்னங்களேயாகும். இதனைத் தொல்லியலார் Megalithic என அழைப்பர். இக்கால ஈமக் குழிகள் மிகப் பெரிய கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட காரணத்தால் இதனைப் பெருங்கற்படைப் பண்பாடு என அழைப்பர். கல்அறை, கல்வட்டம், கல்படை, கல்குவை, கல்திட்டை, கற்கிடை எனப் பலவாறாக இவை காணப்படும். பெருங்கற்படைப் பண்பாடு 2500 ஆண்டுகட்கு முற்பட்ட பண்பாடாகும்.

பெருங்கற்படைச் சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் 'பதுக்கை' எனக் குறிப்பிடுகின்றன.
'செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை' (புறம் 3)
'வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கை' (அகம் 109)
'இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை' (கலி 12)

என்பன 2500 ஆண்டுகட்டு முற்பட்ட பெருங்கற்படையைக் குறிக்கும் சங்க இலக்கியத் தொடர்கள். பூமிக்குள் பதுங்கியிருப்பது, பதுக்கப்பட்டிருப்பது பதுக்கை ஆயிற்று. இவை வீரம்காட்டி மாய்ந்த வீரர்கட்குப் புதிதாக எடுக்கப்பட்டது என்பதை 'வம்பப்பதுக்கை' என்பதன் மூலம் அறியலாம். வீரயுகமான சங்ககாலத்தில் பெரும்பாலும் வீரர்கட்கென்றே பெருங்கற்படைகள் அமைக்கப்பட்டன.

நெடுங்கல்

பெருங்கற்படைச் சின்னங்களான இப்பதுக்கைகளை அமைத்தபின்னர் அதன் அருகே நீண்டு உயர்ந்த குத்துக்கல்லை அடையாளமாக அமைத்தனர். இதனைத் தொல்லியலார் Menhir என அழைப்பர். இவை ஒன்றோ இரண்டோ பெருங்கற்படையின் அருகே இருக்கும்.

இதனைப் புறநானூறு 'பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
இனி நட்டனரே கல்லும்'
என்று கூறும் (264). அகநானூற்றில் இவை
'சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர்
உயர்பதுக்கு இவர்ந்த அதர்கொடி அதிரல்
நெடுநிலைநடுகல்' என்றும்.
'பிடிமடித் தன்ன குறும்பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடுங்கல்'
என்றும் குறிக்கப்படுகின்றன (289, 269).

இந்நெடுநிலைக் கற்களே பிற்காலத்தில் நடுகற்களாக (Hero Stones) மாறின என்பர்.

நடுகல்

Hero Stones (வீரன்கல் - வீரக்கல்) என வழங்கிய கற்கள் இப்பொடுது Memorial Stones (நினைவுக் கற்கள்) என வழங்கப்படுகின்றன.


வரலாற்றின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பழங்குடி மக்களின் பண்பாட்டை விளக்க நடுகற்களே காரணமாக அமைந்துள்ளன. மறவர், எயினர், மழவர், வேடர், கோவலர், வடுகர், கள்வர், பறையர், பாணர் ஆகிய குடிகளைச் சேர்ந்த சேவகன், இளமக்கள், இளையோர், ஆள், இளமகன், அடியாள், அடியார், மன்றாடி, தொறுவாளன் ஆகியோருக்கே பெரும்பாலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கிருந்து உயிர்நீத்த கோப்பெருஞ்சோழனுக்கும், போரில் வீரமரணம் அடைந்த அதியமானுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது (புறம் 221,223,232). பிற்காலத்தில் இவை பள்ளிப்படையாக மாறியது. பெரும்பாலும் வீரர்களுக்கே நடுகல் நாட்டப்பட்டது. குறிப்பாக போருக்கு முதற்காரணமாக அமையும் ஆநிரைகவரும் வெட்சித்திணைக்கும், கவர்ந்த ஆநிரைகளை மீட்கும் கரந்தைத் திணைக்கும் உரிய நடுகற்களே மிகுதியாகும். கல் என்றாலே நடுகல்லையே குறிக்கும் பழக்கம் இருந்தது. 'விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நன்னிலை பொறித்த கல்' (அகம் 179)
'என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்' (குறள் 771)

இவ்விடங்களில் நடுகல் கல் என வழங்கப்பட்டுளமையைக் காணுகிறோம். (கல் நடுவித்தார் மதியுளி - தருமபுரி நடுகல் கல்வெட்டு). ஒரு காலத்தில் நடுகல்லை மட்டுமே தெய்வமாக வணங்கியுள்ளனர். 'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பில் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே' (புறம் 335)

என்பது மாங்குடிகிழார் பாடலாகும்.

இறந்த வீரனின் பெயரையும் பெருமையையும் கல்லில் பொறிப்பர் நடுகல்லுக்கு நீராட்டி நெய்பெய்து வாசனைப்புகை காட்டுவர். விளக்கேற்றுவர். பூக்களைச் சொரிவர். மாலை சூட்டுவர். மயிற்பீலி சாத்துவர். காப்புநூல் கட்டுவர். ஆட்டுக்கிடாய்களைப் பலியிடுவர். துடி, மணி ஒலிப்பர். எண்ணெய் பூசுவர். சிறு கலங்களில் கள் படைப்பர். துணிப்பந்தல் அமைப்பர். வில், வேல், வாளால் வேலி அமைப்பர். பெரும்பாலும் வழிகளில் நடுகல்லை நட்டனர். ஆழமாக நட்டனர். நடுகல்லை ஆள் என ஒரு யானை உதைத்தது. நடுகல் சாயவில்லை, யானையின் கால் நகம் உடைந்ததாம். போர்க்களத்தில் விழுப்புண் பட்டோர் நடுகல் அருகே வந்து புண்ணைக் கிழித்து உயிர் விடுவர். நடுகல்லை வணங்கினால் மழைவரும், அரசன் வெற்றி பெறுவான், பயிர் செழிக்கும், கால்நடை பெருகும், வீட்டுக்கு விருந்தினர் வருவர் என நம்பினர்.

தாழிகள்

தொல்லியல் ஆய்வில் மிகவும் சிறப்பிடம் பெறுவது தாழிகள் ஆகும் (Urns). தமிழ்நாட்டில் இவை பல வகைகளாகக் காணப்படுகின்றன. இவை கூர்முனைத் தாழிகள், கால்கள் உடைய தாழிகள், விலங்குருவத் தாழிகள் எனப் பலவகைப்படும்.

சங்க இலக்கியங்களில் இவை கலம், தாழி, கவிசெந்தாழி, ஈமத்தாழி, தாழியபெருங்காடு. முதுமக்கள் தாழி, மன்னர் மறைத்த தாழி எனப்பலவாறு அழைக்கப்பெறுகின்றன (அகம் 129, புறம் 228, 236, 256, 364, பதிற் 44). தாழிப்புதையல் 2500 ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு வழக்கமாகும், கி.பி. 2,3 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அவ்வழக்கம் மறைந்து விட்டது - தாழிகள் பல மிகப் பெரியவையாக இருந்த காரணத்தால்
மா இருந்தாழி (நற் 271)
ஓங்குநிலைத்தாழி (அகம் 275)
கண்ணகன்தாழி (புறம் 228)

எனக் குறிக்கப்பட்டுள்ளன. இவை கைகளாலும் (Hand made), சக்கரங்களாலும் (Wheel made) செய்யப் பெற்றிருந்தன.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்தான். மிகப்பெரும் புகழ்கொண்ட இவனுக்கு மிகப் பெரிய தாழி அல்லவா வனைய வேண்டும். உலகையே சக்கரமாகக் கொண்டு, இமய மலையையே மண்ணாக வைத்துப் பெரிய தாழியைவனைய வேண்டும். அது உன்னால் முடியுமா? என்று வேட்கோவனைப் பார்த்து வினவுகிறார், ஐயூர் முடவனார் என்னும் புலவர் (புறம் 228).
'அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை யாயின் எனையதூஉம்
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே'
என்பது ஐயூர் முடவனார் பாடலாகும்.
கணவன் மனைவி இருவரையும் ஒன்றாகத் தாழியுள் அடக்கம் செய்ய வேண்டும். அதனால்
'வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி
அகலிதாக வனைமோ'.
எனக் கூறுகின்றார் ஒரு புலவர் (புறம் 256).

தாழி வனைவோர் 'கலம்செய் கோ' எனப்பட்டனர்.
சங்ககாலச் சோழமன்னர்கள் தாழிப் புதையல் வழக்கத்தை ஏற்படுத்தினர் என்று மூவருலாக் கூறுகிறது.
'பதுமக் கடவுள் படைப்படையக் காத்த
முதுமக்கட் சாடி முதலோன்'
என்று பண்டைச் சோழன் ஒருவன் புகழப்படுகின்றான். (குலோ உலா 12).

யவனர்

சங்ககாலத்தில் தமிழ்நாட்டோடு யவனர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர், அராபியர் ஆகிய அனைவரையும் 'யவனர்' என அழைக்கும் வழக்கம் இருந்தாலும் பெரும்பாலும் ரோமானியரே மிகுதியாகத் தமிழகம் வந்தனர்.

மேற்குக் கடற்கரைக்கு மிளகு, சந்தனம், தந்தம், ஏலம், அகில், தேக்கு, இலவங்கம், சில விலங்குகள், பறவைகள் ஆகிய பல பொருள்களுக்காக வந்த ரோமானியர் பாலக்காடு, போளுவாம்பட்டிக் கணவாய் வழியாகக் கொங்கு நாட்டுக்கு வந்து பல வண்ணக் கல்மணிகளை விரும்பி வாங்கினர். சோழநாடு, பாண்டிய நாட்டின் துறைமுக நகரங்கள் வரை சென்றனர். கிழக்குக்கரை முத்துக்களையும் பெற்றனர். ரோம் நாட்டவரின் ரெளலடெட், அரிட்டைன் என்ற உயர்வகைப் பானை ஓடுகள், அம்போரா என்னும் கூர்முனை மதுக்குடங்கள், ரோமானிய சுடுமண் பொம்மைகள், ரோம அரசரின் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன. அகஸ்டஸ் (கி.மு. 44 - 14); டைபீரியஸ் (கி.பி. 14 - 37); நீரோ (கி.பி. 54 - 68) போன்ற ரோம் நாட்டு அரசர்களின் பெயரும் உருவமும் பொறித்த நாணயங்கள் தமிழ்நாட்டில் கிடைத்துள்ளன.

A slashed Roman Aureus of Augustus

மிளகு யவனர்கட்கு மிகவும் பிடித்தமான பொருள். அதனை 'யவனப்பிரியா' என அழைத்தனர். யவனர் கப்பல்களில் பொன்னொடு முசிறிக்கு வந்து பொன்னைக் கொடுத்துவிட்டு கப்பலில் மிளகை ஏற்றிச் செல்வர். 'சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி'
என அகநானூறு (149) கூறும்.

'யவனர் இயற்றிய வினைமாண் பாவை' (நெடுநல் 101)
'வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமாண் நல் இல்' (முல்லை 61-62)
'நயனில் வன்சொல் யவரைப் பிணித்து
நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ' (பதிற். பதிகம் - 2)
'யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்க இனிது ஒழுகுமதி' (புறம் 56)

என்பன சங்க இலக்கியம் குறிக்கும் யவனர் பற்றிய தொடர்களாகும். இத்தொடர்பு 2000 ஆண்டுகட்கு முற்பட்டதாகும்.

தொல்லெழுத்தியல்

பழங்காலக் குகைகளில் உள்ள சமணப்பாழிகளிலும், அகழ்வாய்வில் கிடைத்த பானை ஓடுகளிலும், பழங்காசுகளிலும், மோதிரங்களிலும், முத்திரைகளிலும், கற்களிலும் ஏறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்லெழுத்துக்கள் பல காணப்படுகின்றன. இவற்றைத் 'தமிழி' என அழைப்பர். கரூர் அருகேயுள்ள புகலூர் ஆறுநாட்டார் மலையில் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்திற்குரிய அரசர்கள் அதே வரிசையில் குறிக்கப்பட்டுள்ளனர்.
'மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்
கோ ஆதன் செல்லிரும்பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இ) ளங்
கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்'
என்பது ஆறுநாட்டார்மலைத் தமிழிக் கல்வெட்டாகும்.


மதுரை அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தை அந்துவன் பாடியதாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. அதே மலைக் குகையில் 'அந்துவன் கொடுபித்தவன்' என்ற 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழிக் கல்வெட்டு உள்ளது. (அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை. அகம் 59)

திருக்கோவிலூரைச் சங்க இலக்கியம் 'கோவல்' என்று கூறும். மலையமான் ஆட்சிப்பகுதி. தகடூர் அதியமான் மலையமானை வென்று கோவலை அழித்தான் என்று அவ்வையார் பாடுகிறார் (புறம் 99). திருக்கோவிலூர் அருகில் உள்ள ஐம்பையில் அதியமான் சமண முனிவர்கட்குப் பாழி அமைத்துக் கொடுத்த செய்தி தமிழிக் கல்வெட்டொன்றில் கூறப்படுகிறது.

'ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாழி' என்பது ஜம்பைக் கல்வெட்டாகும். அசோகனின் பிராமிக் கல்வெட்டில் 'ஸதியபுத்ரர்' குறிக்கப்படுகின்றனர். 'அதியாமகன்' என்ற சொல்லே ஸதியபுதோ எனக் குறிக்கபட்டுள்ளது. எனவே தகடூர் அதியமான் மரபில் ஒருவன் அசோகன் காலத்தவன் என்பதில் ஐயமில்லை.

மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் 'நெடுஞ்செழியன்' என்ற பெயர் காணப்படுகிறது. அந்தை, ஆந்தை, நள்ளி, பிட்டன், கீரன், ஓரி, பரணன், சாத்தந்தை, பண்ணன், வண்ணக்கன் போன்ற சங்க இலக்கியங்களில் மட்டுமே பயின்று வரக்கூடிய பல சொற்கள் தமிழி என்ற தொல் எழுத்துக்களில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளன. குறவன் (நற் 201), தித்தன் (புறம் 80), தாயன் (குறு 319), சாத்தன் (நற் 370), வேட்டுவன் (அகம் 36), குட்டுவன்கோதை (புறம் 54), கொல் இரும்பொறை (புறம்53), மாக்கோதை (புறம் 48), பெருவழுதி நற் 55) என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளும், மோதிரங்களும், காசுகளும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் கரூர்ப் பகுதியில் கிடைத்துள்ளன. இவற்றின் எழுத்தமைதி கொண்டு இப்பெயர்கள் எறக்குறைய 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என அறிகின்றோம்.

புலி முத்திரை

புகார் நகரின் துறைமுகத்தில் சங்ககாலத்தில் பொருள்களுக்குப் புலி முத்திரை பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை கூறிகிறது.
'அளந்து அறியாப் பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடிப் பெரும் காப்பின்
வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி'

என்பது பட்டினப்பாலைப் பகுதி (131 - 135). அவ்வாறு புலிச்சின்னம் பொறிக்கப் பயன்படுத்திய முத்திரையொன்று பூம்புகார் நகரில் அண்மையில் கிடைத்துள்ளது.

கடல் கடந்த சான்றுகள்

சங்கத் தமிழர் கடற்செலவில் தேர்ந்தவர்களாக விளங்கினர். கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்றுள்ளனர். > 'நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக' (புறம் 66)

'சினம் மிகு தானை வானவன் குடகடல்
பொலம்தரு நாவாய் ஓட்டிய அவ்வழி
பிறகலம் செல்கலாது' (புறம் 126)

என்பன அதைப்பற்றிய சான்றுகளுட் சிலவாகும். பருவக் காற்றின் பயந்தெரிந்து 2000 ஆண்டுகட்கு முன்பு தமிழர் 'கப்பலோட்டிய' தமிழர்களாக வாழ்ந்துள்ளனர் என்பதை 'வளிதொழில் ஆண்ட' என்ற தொடர் சிறப்புடன் விளக்குகிறது.

தமிழ்நாட்டில் வெளிநாட்டார் குறிப்புகளும், வெளிநாட்டார் தொல்பொருள்களும் கிடைத்துள்ளன. பிற வெளிநாடுகளில் இதுவரை சங்காலத் தமிழகச் சான்றுகள் பெரும்பாலும் அகப்படாமல் இருந்தன. அண்மைக் காலத்தில் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் சங்ககாலச் சான்றுகள் பல கிடைத்துள்ளன. எகிப்து நாட்டில் நைல்நதிக் கரையில் உள்ள 'குவாசிர் அல் காதிம்' என்னும் ஊரில் அமெரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்ணன், சாத்தன் என்ற சங்ககாலத் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன.

எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் லெய்டன் பல்கலைக்கழகத்தார் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 'கொற்ற பூமான்' என்ற சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் பொறித்த மதுச்சாடி கிடைத்துள்ளது. இவையிரண்டும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துப் பொறிப்புக்கள் ஆகும்.

வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள 'பேபிரஸ்' எனப்படும் பண்டைய தாளில் எழுதப்பட்ட கி.பி. முதல் நூற்றாண்டு ஆவணத்தில் முசிறி வணிகன் ஒருவன் கப்பலில் ஏற்றிச் சென்ற வாசனைப் பொருள், தந்தப் பொருள், துணிகள் பற்றிய செய்திகளும். அவற்றின் எடையும் கூறப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 150 வணிகரின் பொருள்கள் இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.


தாய்லந்து நாட்டில் கிளாங்தோம் நகரில் நடத்திய அகழாய்வில் சோழரின் சதுர வடிவான புலிபொறித்த ஒரு செப்புக்காசும், 8 x 4 சென்டி மீட்டர் அளவுள்ள தங்கம் மாற்றுரைத்துப் பார்க்கும் பட்டைக்கல் 'பெரும்பத்தன் கல்' என்ற சங்ககாலத் தமிழிப் பொறிப்போடு கிடைத்துள்ளது. இந்த அயல்நாட்டுச் சான்றுகள் அனைத்தும் 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

தமிழகத்திலும், மேலை நாடுகளிலும், கீழை நாடுகளிலும் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பல்வேறு தொல்பொருட்கள் மூலமும், அறிவியல் பூர்வமாக கால நிர்ணயம் கணிக்கப்பட்டதில் அவை சுமார் 2000 ஆண்டுகட்கு முற்பட்டவை எனத் துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் எல்லை கி.மு. 8 ஆம் நூற்றாண்டு என்றும், கீழ் எல்லை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றோடு சங்க இலக்கியம் பல்வேறு வகைகளில் நெருங்கிய தொடர்பு உள்ளவையாக இருப்பதால் சங்க காலமும் அக்காலமே என்று உறுதிப்படுகிறது. எனவே தொல்லியல் நோக்கில் சங்க காலம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை என ஓரளவு நாம் கணிக்கலாம்.

தமிழக வரலாற்றுப் பேரவையின் எட்டாவது ஆண்டுக் கருத்தரங்கம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 13, 14.10.2001 ஆகிய நாட்களில் நடைபெற்ற போது 13.10.2001 அன்று மாலை நடைபெற்ற 'சங்ககாலம்' என்னும் சிறப்புக் கருத்தரங்கில் அளிக்கப் பெற்ற கட்டுரை.

தொடர்புக்கு

புலவர். செ.இராசு, எம்.ஏ., பிஎச்.டி.,
கொங்கு ஆய்வு மையம்,
3, பி. வெங்கடேசுவராநிவாஸ்,
13/2, வள்ளியம்மை தெரு, நாராயணவலசு,
ஈரோடு - 638011.
தொலைபேசி: 220940


ஆத்தூர் கோட்டை

ஞாயிறு, 30 மார்ச், 2014

தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு

மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.


ஆறகழூர் ஊராட்சி தொடக்கபள்ளி அருகே உள்ள சாவான் நடுகல்

ஆறகழூர் வெளிப்பாளையத்தில் வயலில் உள்ள  சாவான் நடுகல்

  • இடி,
  • மின்னல்,
  • மழை,
  • சூரிய வெப்பம்,
  • கொடிய விலங்குகள்
ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.

நடுகல் வழிபாட்டின் தோற்றம்:

கற்களை அடையாளமாக நடுவதால் "நடுகல்" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது. சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் (அ) எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும்.
கற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், "கற்பதுக்கை" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.
நடுகல் எடுப்பு விழா:

நடுகல் எடுப்பு விழா அறுவகைப்படும். அவை:-
  1. கற்காண்டல்,
  2. கால்கோள்,
  3. கல்லை நீர்ப்படுத்துதல்,
  4. கல்லை நடுதல்,
  5. வீரன்-பெயர்-செயல் பொறித்தல்,
  6. கால் கொண்ட தெய்வத்திற்கு சிறப்பு செய்து வாழ்த்துதல்.
செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.

நடுகல் வணக்கத்தின் பொருள்:

"தாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்," அவனை சான்றாகக்கொண்டு மற்ற தமிழர் நடக்கமுயலல், அவனது புகழ் உலகம் உள்ளளவும் நிலவுக! என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் "பசுக்கூட்டம்" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.

தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.

நடுகல் முறையின் சிறப்புகள்:

போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.

சதிகல் வழிபாடு:

நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.

  • கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்,
  • தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,
எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர்.
ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.

மன்னர்தம் ஆதரவு: 

சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். தீப்பாய்ந்து இறந்த மறப்பெண்டிர் வம்சத்தார்க்கு மன்னர்களும், செல்வந்தர்களும் நிலங்களைத் தானமாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள்
  • உதிரப்பட்டி,
  • ரத்தக்காணி,
  • தீப்பாஞ்சகாணி
எனக் குறிக்கப்பட்டன.

பத்தினித் தெய்வ வழிபாடு:
உடன்கட்டை ஏறிய பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டுப் புறப்பட்டு வைகைக்கரை வழியே ஆவேசமாகச் சென்றாள், பின்னர் வருஷநாடு மலைவழியாக சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள், கண்ணகி, தெய்வமான இடம் இதுவேயாகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் நினைவாக இவ்விடத்தில் கோயிலை உருவாக்கினான்.

பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்: 

முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில் சிங்கள நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக தற்போது உள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் "அங்கணக்கடவை" எனப்படும்.

சிங்களநாட்டில் "பத்தினி தெய்யோ" என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும்.

நடுகல் வழிபாடும், சதிகல் வழிபாடும் இன்றைய காலகட்டத்தில் சிறுதெய்வ வழிபாடுகளாக மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டதாகவே கூறவேண்டும்.



நன்றி:- தமிழ்மணி (தினமணி)

அஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில்

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்

21-5-2010 முதல் 28-9-2010 வரை;

3-1-2011 முதல் 14-11-2010 வரை

குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இதில் 15-7-2010 முதல் 28-9-2010 வரை உத்திரட்டாதியில் வக்ரமாக சஞ்சரிப்பார். மீன ராசிநாதன்- ராசிக்கு 11, 12-க்குடையவர் சாரம் பெறுவதால் லாபமும் உண்டாகும்; சுபவிரயங்களும் உண்டாகும். சிலர் வெளியூர்ப் பயணம், வெளியூர் வாசம் போகலாம். குருவின் வக்ரத்தில் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சுபமங்கள விரயங்களைச் சந்திக்க நேரும்.

பரிகாரம்: சேலம் ஆத்தூர் அருகில் ஆறகலூரில் சிவன் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி இருக்கிறது. இங்கு சென்று வழிபடுவதால் சனி பகவான் சாந்தியடைவார். திருப்பத்தூர் யோக பைரவரையும், வயிரவன்பட்டி பைரவரையும் இலுப்பக்குடி பைரவரையும் சனிக்கிழமை வழிபடலாம்.
நக்கீரன் இதழில்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5426

இருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்

இருட்டில் கிடக்கும் தமிழக வரலாற்றுச் சான்றுகள்! 


கலை, இலக்கியம், கல்வெட்டு, கட்டடம், சிற்பம், ஓவியம், நுண்கலை என்று பரந்து கிடக்கும் நமது செல்வங்கள் தமிழ் மக்களது பண்பாட்டு வாழ்க்கையின் வளர்ச்சியை, உயர்வைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் வாயிலாக, நமது வரலாற்று, பண்பாட்டு மரபுகளை உணர்ந்து, வாழ்க்கை நெறிகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

எனவேதான், வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாகிறது. தன் இனத்தின் வரலாற்றை மட்டுமல்லாது, மனித வாழ்க்கையின் முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் மனிதன் பெரு முயற்சிகளை மேற்கொள்கிறான்.

ஒரு நாட்டின் கலை, இலக்கிய, அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக வெளிக்கொணர வேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள் எளிதில் பயன்கொள்ளக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள், தனியார் என்று பலதிறப்பட்டோரும் தாம் விழையும் வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்ளவும், அவ்வாய்வுகளின் அடிப்படையில் வரலாற்றை வரையவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்.

ஒருமுறை எழுதப்பட்டவுடன் வரலாறு எழுதும் பணி முற்றிலுமாக முழுமை பெற்றுவிடுவதில்லை. ஒவ்வொரு புதிய சான்று கிடைக்கும்போதும், அல்லது பழைய சான்றுக்கு புதிய புரிதல் பெறும்போதும், ஆய்வு முடிவுகள் மாற்றம் பெறுகின்றன. இதனால், அவ்வப்போது வரலாற்றுக்குப் புதியபுதிய விளக்கங்களும் விரிவுகளும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான், வரலாற்றை எழுதுவதற்கான அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது மேலான பணியாக அமைகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைகொண்ட இலக்கியச் செல்வங்களும், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான கல்வெட்டுகளும் பெருமளவில் வரலாற்றுக்கு அடிப்படையாகக் கிடைத்திருக்கின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கல்வெட்டுகளைப் படியெடுக்கத் தொடங்கிய பிறகுதான், இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் இடைக்கால வரலாறு வெளியுலகுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கே புலப்படத் தொடங்கியது.

இந்திய அரசு தொல்லியல் துறையினரின் கல்வெட்டுப் பிரிவு 1887ம் ஆண்டில் தமது பணியைத் தொடங்கி, இன்றுவரை இந்தியா முழுவதுமிருந்து ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டுகளைப் பதிவு செய்திருக்கிறது. இதில், தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் ஏறத்தாழ அறுபதாயிரம் என்ற அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டுக்களைப் பற்றிய சிறு குறிப்புகள் மட்டும், அதுவும் ஆங்கிலத்தில், அந்தந்த ஆண்டு அச்சிடப்பட்டு வந்த கல்வெட்டு ஆண்டறிக்கை என்னும் வெளியீட்டில் கொடுக்கப்பட்டன. ஆனால், இத்தகைய ஆண்டறிக்கைகள், கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களை வெளியிடவில்லை.

தென்னிந்தியக் கல்வெட்டுகள் என்ற தலைப்பில் இதுவரை பதினெட்டுத் தொகுதிகளில் சற்று ஏறக்குறைய 15,400 தமிழ்க் கல்வெட்டுகள் மட்டுமே முழுமையாக அச்சிடப்பட்டிருக்கின்றன. அதாவது, 1908 வரை (இந்திய) மத்திய அரசினால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் யாவும் வெளிவந்துவிட்டன (இடையில் 1905 வரவில்லை). 1908க்குப் பின்னர் படியெடுத்தவற்றுள், மிகக் குறைந்த அளவு மட்டுமே சில தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த கல்வெட்டுகளைக்கூட நம்மால் இன்னும் முழுமையாக வெளியிட முடியவில்லை.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை, ஏறத்தாழ 5,000 கல்வெட்டுகளைப் பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இவற்றுள், தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுப்பில் வந்த சிலவும் மறுபதிப்புப் பெற்றுள்ளன. இவையன்றி,
தென்னிந்தியக் கோயில் கல்வெட்டுகள், புதுக்கோட்டை கல்வெட்டுகள், திருவாங்கூர் கல்வெட்டுகள்
என்ற தலைப்பிலான தொகுதிகளிலும் வேறு சில இதழ்களிலும் பல கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் (இந்திய) மத்திய அரசு கண்டுபிடிக்கப்படும் கல்வெட்டுகளைப் பற்றிய சிறு குறிப்புகளைக் கொண்ட கல்வெட்டு ஆண்டறிக்கை கூடக் கடந்த பத்து ஆண்டுகளாக வரவில்லை. மேலும், கிடைத்துள்ள 500க்கும் மேற்பட்ட செப்பேடுகளில், 200க்கும் குறைவானவையே வெளிவந்துள்ளன. இருப்பினும், இதுவரை படியெடுக்கப்பட்ட 60,000க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில், 25,000க்கும் குறைவானவற்றின் முழு வரிவடிவங்கள் மட்டுமே அச்சில் பதிப்பிக்கப்பட்டு நமக்குத் தரப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 35,000 கல்வெட்டுகள் இருட்டறையில் மறைந்து கிடக்கின்றன.
தமிழ்நாட்டின் இடைக்கால அரசியல், சமூக, பொருளியல் வரலாற்றை ஆய்வு செய்ய முனைவோர், ஐந்தில் இரண்டு பங்குக் கல்வெட்டுகளின் முழு வரிவடிவங்களை மட்டுமே படித்துத் தங்கள் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். பதிப்பிக்கப்படாத 35,000 கல்வெட்டுகளை, ஆண்டறிக்கைகளில் கூறப்பட்டுள்ள சிறு குறிப்புகளை மட்டுமே கொண்டு பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய பதிப்பிக்கப்படாத கல்வெட்டுகளின் முழுமையான பாடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், இவை வைக்கப்பட்டுள்ள இடமான மைசூர் செல்லவேண்டும். அங்கு சென்றாலும், அச்சிடப்படாத ஒரு சிலவற்றைக் கேட்டுப்பெற முடியுமேயன்றி, அனைத்தையும் பயன்கொள்ள வாய்ப்புகள் கிடைக்காது.

வரலாற்று ஆய்வினை மேற்கொள்ள விழைவோர் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், சுவடி நூலகங்கள்,
பிற வைப்பிடங்கள் என்று சான்றுகளும் ஆவணங்களும் கிடைக்கின்ற இடங்களுக்குச் சென்று பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆனால் கல்வெட்டுகளைப் பொறுத்தவரை, அவை தமிழகம் முழுமையிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஊர்களில் அமைந்துள்ள கோயில் சுவற்றிலும் இன்னபிற இடங்களிலும் விரவிக் கிடக்கின்றன. இவற்றைக் குறுகிய காலத்தில் சென்று, பார்த்து, படித்துவிட இயலாது. அப்படி ஓரிரு இடங்களுக்குச் சென்றாலும், நேரடியாகப் படிக்கும் அளவுக்கு அவை தெளிவுபட அமைந்திருக்காது. வெள்ளைத் தாளில் உரிய முறையில் கறுப்பு மை ஒற்றிப் படியெடுத்துத்தான் படிக்க இயலும். இதற்கு மிகுந்த காலம் பிடிக்கும். பொருள் செலவும் கூடுதலாகும். மேலும், வரிவடிவங்களும் வேறுவேறாக இருப்பதுடன் எழுத்து மயக்கங்களும் ஏற்பட இடமளிக்கின்றன. எனவே, இதில் உள்ள இன்னல்களும் தடைகளும் மிக. எனவேதான், பிற ஆவணங்கள் - சான்றுகள் போலன்றிக் கல்வெட்டுகளை உரிய இடங்களுக்குச் சென்று பயன்படுத்திக்கொள்ள முடியாமல், அச்சில் பதிக்கப்பட்ட பாடங்களிலிருந்து -தொகுதிகளிலிருந்து மட்டுமே பயன்கொள்வது தேவையாகிறது.

இத்தகையதொரு நிலை இருந்தபோதும், இக்கல்வெட்டுகளை முழுமையாக விரைந்து வெளியிட (இந்திய) மத்திய அரசு சீரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பெற்று, தமது முயற்சியில் இவற்றை வெளியிடத் தமிழக அரசும் முனைப்புக் காட்டவில்லை. இக்கல்வெட்டுகளின் முழு வரிவடிவங்களை அச்சில் வெளியிடுவதற்கு ஒரு சில தடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 கல்வெட்டுகள் இன்றைய தமிழ் வரிவடிவத்தில் இல்லாது, தமிழுக்கான முன்னைய வரிவடிவத்தில் இருப்பதாலும், எழுதிய முறையில் தெளிவு இல்லாமல் இருப்பதாலும் படிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் வேறுபாடுகள், குழப்பங்கள் ஏற்படுகின்றன. இவற்றால், கல்வெட்டுகளை வெளியிடுவதில் தடைகள் ஏற்படுகின்றன என்பது உண்மைதான். இத்தகைய படிப்பு வேறுபாடுகளை ஆங்காங்கே அடிக்குறிப்புகளாகச் சேர்த்துவிடலாம். அத்துடன், படியெடுக்கப்பட்ட கல்வெட்டுப் படிகளை வேண்டிய இடத்தில் படம் போன்று உள்ளபடியே வெளியிடலாம்.

அடுத்து, கல்வெட்டுகளில் ஸ்வஸ்திஸ்ரீ, சதுர்வேதி மங்கலம் என்பன போன்ற மிகச் சில சொற்கள் கிரந்த எழுத்துகளில் வெட்டப்பட்டுள்ளன. தமிழ்ச் சொற்களுக்கிடையே வரும் இந்தக் கிரந்தச் சொற்களை, கிரந்த எழுத்து வடிவத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று மத்திய அரசின் கல்வெட்டுப் பிரிவினர் பிடிவாதமாக இருந்தனர்; இப்போதும் அப்படியே இருக்கின்றனர். கணினி வழியாக கதிர் அச்சு முறை நடைமுறைக்கு வந்து, இத்தகைய நுட்பச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னரும், கல்வெட்டுப் பதிப்பு விரைவுபடவில்லை.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கல்வெட்டுகளில் உள்ள கிரந்தச் சொற்களுக்கும் தமிழ் வரிவடிவ எழுத்துகளையே பயன்படுத்தி, விரைவாகப் பல கல்வெட்டுத் தொகுதிகளை வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது மீண்டும் கிரந்த வரிவடிவத்துக்கு மாறி, பணிகளை முடக்கிக் கொண்டுள்ளது.

கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துகள்கூட இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் வரிவடிவத்தில் இல்லை. ஆனால் அச்சிடும்போது, இன்றைய தமிழ் வரிவடிவமே பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, கிரந்தச் சொற்களையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டே அச்சிடலாம். தேவையென்றால், பிற மொழிச் சொல் அல்லது கிரந்த எழுத்தில் உள்ளது என்பதைக் காட்ட, சாய்வெழுத்துகளைப் (Italic) பயன்படுத்தலாம்.

மேலும், கல்வெட்டில் உள்ள எழுத்துகளைப் படிக்கத் தனிப் பயிற்சி வேண்டியிருப்பதைப் போலவே, கிரந்த எழுத்துகளைப் புரிந்துகொள்ளவும் முழுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் எளிதில் புரிய, கல்வெட்டுகளில் உள்ள அனைத்தையும் இன்றைய தமிழ் வரிவடிவத்தில் வெளியிடுவதுதான் ஏற்றதாக அமையும்.
அச்சு நுட்பம் வியத்தகு வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில், 35,000 கல்வெட்டுகளையும் ஒன்றிரண்டு ஆண்டுகளில்கூட வெளியிட்டுவிட முடியும். 120 ஆண்டுகளாகப் படியெடுக்கும் பணி நடைபெற்றுவந்தாலும், இப்பொழுதும் ஆண்டுக்கு 250 முதல் 300 வரையில் புதிய கல்வெட்டுகள் (இந்திய) மத்திய அரசின் கல்வெட்டுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படியெடுக்கவும், படிக்கவும், பதிப்பிக்கவும் நான்கு கல்வெட்டு வல்லுநர்களே பணியில் இருக்கிறார்கள்.

முன்னர் தமிழ்நாட்டில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் யாவும் உதகமண்டலத்தில் பாதுகாக்கப்பட்டன. பின்னர், அவையெல்லாம் கர்நாடகத்தில் உள்ள மைசூருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

ஏற்கெனவே சென்னையில் இந்திய அரசு தொல்லியல் துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் இங்கு, கல்வெட்டுப் பிரிவு அலுவலகம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் படியெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளின் படிகள் மைசூரிலேயே வைக்கப்பட்டுள்ள வேடிக்கை தொடர்கிறது. அவை சென்னைக்குக் கொண்டு வரப்படவேயில்லை.

ஒருவேளை, சென்னையில் வெப்பநிலை தடையாக இருக்குமாயின், இன்றைய வளர்ச்சி அளவில், முழுமையாகக் குளிரூட்டப்பட்ட கட்டடத்தில் கல்வெட்டுப் படிகளை வைத்துப் பாதுகாக்கலாம். தமிழ்நாட்டு ஆய்வாளர்கள் கல்வெட்டுப் படிகளைப் பயன்படுத்துவதற்கு இது முதல்கட்ட வாய்ப்பாக அமையும்.

மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறையினர் எவ்வகையான ஒருங்கிணைப்புமின்றி, தனித்தனியாகக் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியினையும் வெளியிடும் பணியினையும் செய்வதால் வீண்செலவும் இரட்டிப்பு வேலையும்தான் மிஞ்சுகின்றன. இரண்டு துறைகளுடைய நோக்கங்களும் செயல்பாடுகளும் ஒன்றுதான். இருக்கிற அலுவலர்கள்தாம் வேறுவேறு. ஆனால், அவர்களது அணுகுமுறைகளும்கூட வேறுவேறு என்பதுதான் வேதனை!
இக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழகம் எங்கும் பரவிக் கிடக்கின்ற கோயில்களில் இருந்து படியெடுக்கப்பட்டவை. என்றாலும், பல கல்வெட்டுகள், கோயில்களை ஒட்டியுள்ள குளக்கரை போன்ற இடங்களில் கிடந்த கல்தூண்கள் போன்றவற்றிலிருந்தும், சிதைந்த கோயில் சுவற்றிலிருந்தும் படியெடுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படித் தனியாகக் கிடந்த அல்லது கிடக்கிற கல்தூண்கள் போன்றவற்றைக் காக்க எவ்வகையான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. எனவே, இக்கற்களை வேறு பணிகளுக்குப் பயன்படுத்த வாய்ப்புகள் ஏற்பட்டன. இதனால், இக்கல்வெட்டுகளில் சில அழிந்து போயின. இதேபோன்று, சிதைந்த கோயில்களைப் புதுப்பிக்கும்போதும் சிதையாத கோயில்களுக்குக் குடமுழுக்கு போன்ற திருப்பணிகள் மேற்கொள்ளும்போதும், கல்வெட்டு இருக்கும் பகுதிகள் உருக்குலையக்கூடிய சூழல்கள் ஏற்பட்டன. ஆகவே, கல்வெட்டுகள் இருக்கும் இடங்களைக் காப்பதும் தேவையாகின்றன.

இந்நிலையில், 1887ம் ஆண்டு முதல் மத்திய அரசின் கல்வெட்டுப் பிரிவு படியெடுத்த கல்வெட்டுகளில் பல, தற்போது அதே பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையினருக்குக் கிடைக்காமலும் போகக்கூடும்.
மத்திய அரசு நூற்று இருபது ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றிவரும் அதே பணியினை, தமிழ்நாடு அரசு மீண்டும் செய்ய வேண்டுவது இல்லை. அதே போன்று, நல்ல வெளியீட்டு வாய்ப்புகளைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரிடம் கல்வெட்டுகளை அச்சிடும் பொறுப்பை முழுமையாக மத்திய அரசு கொடுத்துவிட முடியும்.

தமிழ்நாடு தொடர்பான ஆவணங்களாக - சான்றுகளாக இருப்பதால், மத்திய அரசு தம் பொறுப்பில் உள்ளவற்றை மாநில அரசுக்குக் கொடுப்பதில் தவறு ஏதும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. இரு துறைகளும் இணைந்து பணியாற்றினால் மேலும்மேலும் பயன்பெற முடியும்.
தொடக்க காலக் கல்வெட்டுகளில் சில, கி.மு. 3ம் நூற்றாண்டுக்கும் முன்னையவையென உறுதிப்பட்டிருக்கின்றன. புதிய சான்றுகளும், ஆய்வுகளும், தமிழ் எழுத்துகளுக்குச் சிந்துவெளிப் பண்பாட்டோடு உள்ள உறவுகளை மெய்ப்பிக்கின்றன. எனவே, செம்மொழிச் செயல்பாடுகளுடன் இயைந்து, கல்வெட்டுப் பதிப்பினையும் செம்மையுறச் செய்யவேண்டும்.

ஏட்டில் கிடந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை வெளியிட ஓர் சி.வை.தாமோதரனாரும், ஓர் உ.வே.சாமிநாதய்யரும் நமக்குக் கிடைத்தார்கள். இவர்களது முயற்சிகளைப் போன்றே, இருட்டில் கிடக்கும் வரலாற்று ஆவணங்களான கல்வெட்டுகளை வெளிக்கொண்டு வருவதிலும் முனைப்புகள் தோன்றவேண்டும். கல்வெட்டு ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகமே இதனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.


நன்றி: தமிழ்மணி (தினமணி)

வெள்ளி, 28 மார்ச், 2014

ஆறகழூர் அஷ்டபைரவர்

நவகிரக தோஷங்கள் நீக்கும் ஆறகழூர் அஷ்டபைரவர் ஆலயம்


----------------------------------------------------------------------------------------------
சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகழூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தை எட்டுதிக்கிலும் அஷ்டபைரவர்கள் காவல் காத்து வருகின்றனர். இந்த அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஒருமுறை மன்மதன் தனது மனைவி ரதியுடன் சேர்ந்து தம்பதி சமேதரனாய் சிவபெருமானை வழிபட விரும்பினான். வசிஷ்ட நதிக்கரையில் பசுமையான சோலையில் நடுவில் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த லிங்கத்திருமேனியை கண்டான்.

தனது சிவவழிபாட்டிற்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க காலபைரவரிடம் வேண்டினான். காலபைரவர் எட்டுத்திக்கிலும் எழுந்தருளி இடையூறு வந்து விடாமல் காத்தருளினார். நவகிரகங்கங்கள் கால பைரவருக்கு கட்டுபட்டவர்கள் என்பதால் அஷ்டபைரவர்களையும் ஒருசேர வணங்கினால் கஷ்டங்கள் நீங்குவதோடு, நவக்கிரக தோஷங்கள் நீங்கி நலம் பெருகும். காலபைரவர் சனீஸ்வரனுக்கு குரு என்பதால் ஏழரைச்சனி பாதிப்பு உள்ளவர்கள் வழிபட தோஷங்கள் முற்றிலும் நீங்கப்பெறுவர்.

attur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு வாயில்




ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் ரகசிய வாசல் இது..கோட்டையின் பின் புறத்தில் உள்ளது...

..இதன் உள்ளே புகுந்து சென்றால் தலைவாசல் வரை செல்லலாம் என்று கூறுகிறார்கள்....யாருக்காவது நுழைந்து பாக்கும் ஆசை இருக்கா..?




செவ்வாய், 18 மார்ச், 2014

ஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தானிய களஞ்சியம்

தானிய களஞ்சியம் ஆத்தூர் கோட்டை

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் அருகே தியாகனூரில்(2 புத்தர் சிலைகள் உள்ள ஊர்)பெருமாள் கோவில் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு..

----------------------------------------------------------------------------------------------
காலம்: 12 ஆம் நூற்றாண்டு

அரசன்: வாணகோவரையன்

செய்தி:ஆறகளூர் மலை மண்டலப் பெருமாள் கோவில் ஆராதனைக்கும் ,திருப்பணிக்கும் முதலாக,மகத மண்டலத்தை சேர்ந்த தொழுவூரில் வாரப்பற்றாக ஆயிரங்குழி நிலமும் பொன் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திருவிடையாட்டமாக இக்கோவில் ஸ்ரீ வைணவரிடத்தில் கொடுக்கப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------
கல்வெட்டு:

ஸ்வஸ்த்ஸ்ரீ அருளிச் செயல் ஆறகழூர் மலை மண்டலம்

பெருமாள் கோயில் திருப்பதி சிலைஷ்வைற்ற

இந் நாயனார்கு திருவாராதனமும் திருப்

பணிக்கு


உடலாக மகதமண்டலத்துத் தொழுவூர் வராபற்று

   நன்செய் நிலத்திலே பதினெட்டாவது பிசானம்

   முதல்பெற ஆயிரக்குழிபொ

ஸ்வரி உள்ளிட்ட அலைத்தாயங்களும் திருவிடையாட்ட

     இறையிளியாகத் தந்தோம்.இந்நிலங்கைக்

     கொண்டு இந்நாயனார்ளத் திருவா

ராதனமும் திருப்பணியும் நடத்தவும்.  இப்படிக்குத் திரு

      விடையிட்ட இறைஇனியாக சந்திராதித்

       தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பி

       லும்

வெட்டிச்சொல்வாழி  ஆயிரத்துக்கும். இவை

  வாண கோவரையன் எழுத்து .


ஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1

ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்திகள்----1

-----------------------------------------------------------------------------------------
இடம்:ஆத்தூர் வட்டம்,ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் மகா மண்டபம்-தென் சுவர்..
செய்தி; வாணகோவரையன்,கோவில் பச்சைக்குப் பத்து பசுக்களையும் ஏனைய பசுக்களையும் கோவில் திருப்பணிக்குமாக விடப்பட்ட செய்தி..
-------------------------------------------------------------------------------------------

கல்வெட்டு:

ஸ்வஸ்தை யாண்டு ஏழாவது முதல் நம்ப

சுக்களிற் கேக்களிகுல ஆண்டு தோறும் பத்

துச்சே... பமாக விடவும் நீக்கி நின்ற .. சே

க்கள் திருக்காமீச்வ ரருடைய நாயனார்கோ

யில் பொன்பரப்பின பெருமாள் திருமதி

க்கும் உட்பட்ட திருப்பணிகளுக்கும்

சந்திராதித்த

வரையும் குடத்தோம். வாணகோவ

ரையன் எழுத்து. இனவ வில்லவராயன்

எழுந்தருளிய


...
----------------------------------------------------------------------------------
இந்த கல்வெட்டின் படி கோவிலுக்கு பூசைக்காக வாணகோவரையன் மகதை பெருமாளும் அவன் திருமதி(மனைவியை குறிக்கிறதா?)பசுக்களை தானமாக கொடுத்தது தெரிகிறது..இந்த கல்வெட்டின் படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு மகதை பெருமாள் பொன் வேய்தது உறுதியாகிறது....காமநாதீஸ்வரர் கோவிலில் இருப்பது பொன்பரப்பின மகதை பெருமானும் அவர் துணைவியாகவும் இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது....

திங்கள், 17 மார்ச், 2014

பொன் பரப்பின மகதை பெருமான்

ஆறகழூரை தலைநகராக கொண்டு ஆண்ட பொன்பரப்பின மகதை பெருமான் பற்றி திருவண்ணாமலை கல்வெட்டுகளில் உள்ளன ..அது பற்றி விக்கிபீடியாவில் உள்ள செய்தி..ஆறகழூர் காமநாதீஸ்வரன் கோவிலில் உள்ள சிலை இந்த பொன்பரப்பின மகதை பெருமானாகத்தான் இருக்க கூடும்..
இவருக்கு செம்பை ராச ராச தேவன் என்ற பெயர் இருந்ததாகவும் தெரிகிறது...
----------------------------------------------------------------------------------------------
மகதைப் பெருமாள்
http://ta.wikipedia.org/s/e0g


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதைப் பெருமாள் என்பவன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவர்களில் ஒருவன். ‘வாணகோவரையன் பொன்பரப்பினான்’ என்னும் அடைமொழியுடனும் இவனது பெயரைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகதை என்பது தமிழ்நாட்டிலுள்ள மகதம். இதனை நடுநாடு என்றும் கூறுவர். மகதை, மகதநாடு என்பதன் மரூஉ. இது வடபுலத்திலுள்ள மகத தேசம் அல்ல. தமிழ்நாட்டிலேயே மேற்கே சேர்வராயன் மலை, தெற்கில் கொல்லி மலை, வடக்கில் சவ்வாது மலை எனும் மலைகளிடைப்பட்டு செங்கம் கணவாய் வழியாக திருவண்ணாமலை மற்றும் அதன் கிழக்கில் அமைந்துள்ள பெண்ணையாறு பாயும் நிலப்பரப்பினை சார்ந்துள்ள நாட்டினைக்குறிக்கும். மலைபடுகடாமில் பாட்டுடைத் தலைவனாக பாடப்பட்ட நன்னன் சேய் நன்னன் தன் நாட்டினை சூழ்ந்துள்ள பகுதியுமாகும். வாணர்குலத் தவைர்கள் இப்பகுதியை சிலகாலம் ஆண்டுள்ளனர். இவர் நீண்ட தனி அரசமரபுடையோர் இல்லை எனினும் இடையிடையே பற்பலகாலங்களில் பெருமன்னர்களுக்கு கீழிருந்து படைத்தலைவர்களாகவும், தனியாட்சி பெற்ற குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்துள்ளர்.[1]வடநாட்டிலுள்ள மகதம் தமிழ் அல்லாத மொழி பேசப்படும் 17 நிலங்களில் ஒன்று. மகதைப் பெருமாள் திருவண்ணாமலைக் கோயிலில் பொன் வேய்ந்தான். இவனைப் போற்றும் 22 பாடல்கள் (வெண்பாக்கள்) திருவண்ணாமலைக் கோயில் சுவரில் கல்வெட்டுகளாக உள்ளன.
அவற்றில் எடுத்துக்காட்டுக்காக ஒரு பாடல்.

தாரும் முடியும் முரசும் தமக்குரிய
பாரும் உடன்பெறுவர் பார்வேந்தர் – வீரப்
பெருமாள் மகதேசன் பேர்எழுதித் தத்தம்
திருமார்பில் ஆளோலை செய்து.[2]

இப்பாடல் சொல்லும் செய்தி
தார், முடி, முரசு, ஆளும் நிலம் போன்றவற்றைத்தான் பார்வேந்தர் பெறுவர். மகதை வீரப்பெருமாள் காலத்திலோ இவன் பேரை எழுதிய ஆள்மாலை (ஒன்று) செய்தும் அணிந்துகொள்வர் (மகதைப் பெருமாளோ தன் மார்பில் பலர் எழுதிய ஓலைகளை (விழுப்புண்களை) அணிந்துகொண்டிருக்கிறான் எனினும் அமையும்.)

பார்வேந்தர்கள் மகதேசனை நாடிச்சென்று தார், முடி, முரசு, தமக்குரிய அரசு ஆகியவற்றைப் பெறுவர். மேலும் மகதேசனுக்கு தாங்கள் அடிமை என தம் மார்பில் ஆளோலை எழுதி அணிவர். என்னும் பொருளிலும் அமையும்.

கருவிநூல்
• மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
மேற்கோள்கள்
1. Jump up ↑ நூ. த. லோகசுந்தரமுதலி,கல்வெட்டுப் பாடல்கள் மஞ்சரி-1, தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி, VIII, #97, (A.R. 97 of 1902)
2. Jump up ↑ http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/utf8/pmuni0311.html

ஆறகழூர் அய்யனார் கோவில்

ஆறகழூர் அய்யனார் கோவில் கோட்டைகரை கொத்தர்களின் குல தெய்வம் ..அய்யனார் கோவில் நுழைவு வளைவு கட்டி திறப்பு விழா 12-03-2014ல் நடை பெற்றது. நுழைவு வாயில் கட்டியவர் அரு.மாணிக்கம் குடும்பத்தை சார்ந்த ஹை-டெக் பாலு..





ஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு


ஆறகழூர் துக்க செய்தி..
----------------------------------------------
ஆறகழூர் பள்ளியில் படித்த பல மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும்,கல்வி மாணவர் முன்னேற்றத்தின் பால் பெரு அக்கறை கொண்டவருமான திரு ஆசிரியர் கணேசன் அவர்கள் நேற்று இரவு 9 மணி அளவில் இயற்கை எய்தினார்..மாணவர் சமுதாயத்தின் சார்பாகவும் பொது மக்கள் சார்பாகவும் கல்வித்துறையின் துரோணாச்சியார் அண்ணார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....அவர் மறைந்தாலும் அவரின் சேவை அவரை நினைவு கொள்ள வைக்கும்...


வாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?
http://bit.ly/1gwgd4Y



வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என இங்கே பார்க்கலாம் -
http://www.elections.tn.gov.in/searchid.htm
...மேலும் பார்க்க
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?
http://bit.ly/1gwgd4Y


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என இங்கே பார்க்கலாம் -
http://www.elections.tn.gov.in/searchid.htm


பதிவு மற்றும் திருத்தங்களுக்கு
http://www.elections.tn.gov.in/eregistration/


பிற விபரங்களுக்கு - http://www.elections.tn.gov.in/