வெள்ளி, 5 ஜனவரி, 2018

புத்தூர் நடுகல்

தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 2 நடுகற்கள் பற்றிய செய்தி இன்றைய 3/01/2018 காலைக்கதிர், தினமணி,தினத்தந்தி,தினகரன் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கும் செய்தியாளர்கள் திரு காலைக்கதிர் தமிழ்செல்வன்,திரு தினமணி சரவணன்,திரு தினத்தந்தி வேலுமணி, திரு தினகரன் சேகர் ஆகியோருக்கு சேலம் வரலாற்று ஆய்வு மையம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
காலைக்கதிர் செய்தி

தலைவாசல் அருகே 2 நடுகற்கள் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே புத்தூர் என்ற கிராமத்தில் 2 நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தினத்தந்தி
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் புத்தூர் கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது புத்தூர் அரசுப்பள்ளி முன்புறம் உள்ள மரத்தடியில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன
இந்தியன் எக்ஸ்பிரஸ்
.
நடுகல்
ஆநிரை கவர்தல் அல்லது ஆநிரை மீட்டல், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், மக்களுக்கு தீங்கு செய்த புலி , பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றி போன்ற கொடிய மிருகங்களை வேட்டையாடும்போது இறந்தவர்கள், தன் நாடு போரில் வெற்றி பெற கொற்றவையின் முன் தன் உயிரை தானே பலி கொடுத்து கொண்டவர்கள், மக்கள் நலனுக்காக உயிரிழந்தவர்கள் இவர்களுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது.
தினமணி
புத்தூரில் காணப்படும் நடுகற்கள் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்டிருக்கலாம். இவை 40 செ.மீ உயரம் 35 செ.மீ அகலம் உடையதாக உள்ளது. இதில் ஒரு நடுகல் தலை இல்லாமல் உள்ளது. இதை தலைவெட்டி சாமி என ஊர் மக்கள் அழைக்கிறார்கள். முதல் நடுகல்லானது பின்னோக்கிய இடது பக்க கொண்டையுடனும் ,இடது கையில் வில் பற்றி வலது கையில் நாணில் அம்பை பூட்டி தொடுக்கும் நிலையில் உள்ளது. முதுகு பக்கம் அம்புக்கூடு ,இடையில் அரையாடை இடுப்பில் குறுவாளுடன் இடது பக்கம் எதிரியை தாக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டாகலாம்.
18ஆம் நூற்றாண்டு நடுகல் வீரன்

இரண்டாவது நடுகல்லானது தலை சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது . கழுத்தில் சரபளியும் சவடியும் காட்டப்பட்டுள்ளது .மார்பில் சன்னவீரம் வலது கையில் கத்தி , இடது கையில் வில் ஏந்தியும், வயிற்றுக்கட்டும் (உதிரபந்தம்) காட்டப்பட்டுள்ளது. வயிற்று கட்டின் சுங்கு முடிச்சு இடது பக்கம் காட்டப்பட்டுள்ளது. இடை முதல் தொடை வரை அரையாடையும் , வலதுகால் நேராகவும் இடது கால் இடப்பக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது.
17ஆம் நூற்றாண்டு நடுகல்
சன்ன வீரம்
இந்த நடுகல்லில் காணப்படும் சன்னவீரம் முக்கியமான ஒன்றாகும் .சன்னவீரத்துடன் காணப்படும் நடுகற்கள் அரிதாகவே உள்ளது. சன்னவீரம் போர்கடவுளான முருகன் அணிவதாகும். இது வீரத்தின் சின்னம் ,வீரச்சங்கிலியில் அமையும் ஓர் உறுப்பாகும். கழுத்தினை சுற்றியும் மார்பணிகளை சுற்றியும் ஒரு மூலையிலிருந்து எதிர்மூலைக்கு குறுக்கே சென்று முதுகிலும் அப்படியே அமைந்த இரு சங்கிலிகள் சன்ன வீரம் எனப்படும். இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று தரவுகள் கிடைக்கலாம். இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினார்கள்.
ஆறகழூர் பொன்.வெங்கடேசன், வீரராகவன் ஐயா
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்