திங்கள், 25 அக்டோபர், 2021

நாகலூர் கல்வெட்டுகள்

 

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் M.A(HIS),M.A(JMC),M.A(PU.AD), M.PHIL,D.pharm 

தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்             

செல் எண் : 9047514844, 7010580752

                           








கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலூர் என்ற ஊரில் ஆற்றங்கரை ஓரம் அமைந்துள்ள கயிலாயமுடைய

 நாயனார் என்ற கோயிலில் உள்ள ஒரே ஒரு கல்வெட்டை பற்றி இங்கு பார்போம்.

நாகலூர் முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்டத்தில் இருந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம்

 பிரிக்கப்பட்ட பின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது. 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இந்த

 ஊரை நாவலூர் என அழைக்கிறது.

                                     

ஊர் பெயர் காரணம்.

பழங்காலத்தில் அமைந்த ஊர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாகவே அமைந்தது

.
ஆறு,மரங்கள்,ஏரி போன்றவற்றின் அடிப்படையிலும் ஊர்கள் பெயர்கள் அமைந்தன.

 
இந்த ஊரில் நாவல் மரங்கள் அதிகம் இருந்ததால் நாவலூர் என்ற பெயர்

 
ஏற்பட்டிருக்கலாம்.காலப்போக்கில் நாகலூர் என்று மருவி இருக்க கூடும். கல்வெட்டு இவ்வூரை

 
நாவலூர் என்றே அழைக்கிறது.

இருப்பிடம்

பண்டைய கோயில்கள் பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரத்திலேயே அமையப்பெற்றன. அந்த வகையில்

 
கோமுகி ஆற்றங்கரை ஓரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் ஊரானது

 
இக்கோயில் இருக்கும் பகுதியை சுற்றி இருந்திருக்க கூடும். தற்போது கள்ளக்குறிச்சி உளுந்தூர்

 
பேட்டை சாலையில் குடியிருப்புகள், கடைகள் ஏற்பட்டு கோயிலை விட்டு தள்ளி ஊர் நிலை

 
பெற்றுள்ளது.
                                           




நாகலூருக்கு அருகே வரஞ்சரம் என்ற பழமையான ஊர் அமைந்துள்ளது. இது பல்லவர் கால

 கோயிலாக இருக்க கூடும், பின்னர் மறுசீரமைக்கப்பட்டிருக்க கூடும்.பல்லவர் கால கோயில் என

 கருத இங்குள்ள லகுலீசர் சிற்பமும், கதிர் விநாயகர் சிற்பமும் சான்றாக அமைகிறது. நாகலூர்

 கல்வெட்டை கண்டறிந்து படிக்கும்போது, இந்த லகுலீசர் சிற்பத்தையும் கண்டறிந்தோம்

.கோயில் மிகச் சிறிய அளவிலேயே அமைந்துள்ளது. .கோட்டச்சிற்பங்களும் தற்போது

 காணப்படவில்லை. செங்கள் தளியாக இருப்பதால் கோயில் கருவறைப்பகுதியில் கல்வெட்டை

 பொறிக்க முடியவில்லை. எனவே தனியான ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு

 கோயிலின் முன் நடப்பட்டுள்ளது.



கல்வெட்டை கண்டறிந்த சூழல்

கி.பி 1995 ஆம் ஆண்டு முதல் எனக்கு வரலாற்றில் ஆர்வம் ஏற்படத்துவங்கியது.அது முதல்

 
கல்வெட்டுகளையும், நடுகற்களையும் தேடத்துவங்கினேன். 30 ஆண்டுகளாக விழுப்புரம் பகுதியில்

 
கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வுகள் செய்து வரும் திரு விழுப்புரம் வீரராகவன் ஐயாவுடன்

 
நட்பு ஏற்பட்டது. அது முதல் ஐயாவுடன் இணைந்து பயணிக்க துவங்கினேன்.

  
நாங்கள் ரெட்டாக்குறிச்சி என்ற ஊரில் 7 கல்வெட்டுகளை கண்டறிந்து படி எடுத்து படித்தோம்

.
அப்போது அந்த ஊர் மக்கள் அருகே வரஞ்சரம் என்ற ஊரில் ஒரு பழமையான சிவன்கோயில்

 
உள்ளது என்ற தகவலை தெரிவித்தனர்.

சில நாட்கள் கழித்து நாங்கள் வரஞ்சிரம் ஊரை நோக்கி பயணித்தோம். அப்போது கோயில்

 
மூடியிருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து , அவரிடம் விவரத்தை சொன்னோம். அவர் தான்

 
வெளியூர் கிளம்பிக்கொண்டிருக்கிறேன் இன்னொரு நாள் வாங்க என சொன்னார்.

ஒரு பத்துநிமிட அனுமதி பெற்று விரைவாக கோயிலையும்,சிற்பங்களையும் படம் எடுத்துக்கொண்டு

 
கள்ளக்குறிச்சி நோக்கி கிளம்பினோம்.

அப்படி செல்லும் வழியில் நாங்கள் பார்த்த சிறிய சிவன் கோயில்தான் இந்த கயிலாசமுடைய

 
நாயனார் கோயில்..இக்கோயிலின் முன் ஒரு பலகைக்கல் நடப்பட்டு அதில் எழுத்துக்கள்

 
பொறிக்கப்பட்டிருந்தன.


இதனையும் கடவுளாக கருதிய மக்கள் கல்வெட்டு முழுக்க எண்ணய் தடவி வழிபட்டுள்ளனர்.நீண்ட

 நாட்கள் எண்ணெய் தடவப்பட்டுள்ளதால் எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை. நானும் சாரும்

 கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கல்வெட்டை சுத்தம் செய்தோம்.

                  





அந்த கல்வெட்டு செய்தி உங்களுக்காக

. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன்,

 ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம்

 வட்டம் நாகலூர் என்ற ஊரில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது நாகலூர்

 கயிலாயமுடையநாயனார் என்ற சிவன் கோயிலில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு

 செய்யப்பட்டது.

  95 செ.மீ நீளமும், 85 செ.மீ அகலமும்,7 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகைகல்லில் முன்பக்கம் 14

 வரிகள்,பின்பக்கம் 9 வரிகளுடனும் கல்வெட்டு அமைந்துள்ளது. கோயிலின் முன்பக்கம் இது

 நடப்பட்டு உள்ளது.

830 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம்குலோத்துங்கசோழனின் 13 ஆம் ஆட்சியாண்டில் கி.பி 1191 ஆம்

 
ஆண்டு இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் வீரராசேந்திர சோழன் என மூன்றாம்

 
குலோத்துங்கன் குறிப்பிடப்பட்டுள்ளார்.கல்வெட்டில் நாவலூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

  12
ஆம்நூற்றாண்டில் சோழநாட்டில் ஜனநாத வளநாட்டு பரனூர் கூற்றத்தில் நாவலூர்

 
அமைந்திருந்தது..கூற்றம் என்பது இன்றைய தாலுக்கா போன்றது.
 
  
இங்குள்ள கயிலாயமுடைய நாயனார் கோயிலுக்கு துறையுடையான் ஊராடுவான் ஆன

 
நந்திபந்மன் என்பவர் ஒரு திருவிழாவை ஏற்படுத்தியுள்ளார். இக்கோயில் பூசைக்கு என ஏற்கனவே

 
பத்து மா (ஆயிரம் குழி) நிலம் தானம் செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு ஆயிரம் குழி நிலம்

 
ஒதுக்கப்பட்டு மொத்தம் இரண்டாயிரம் குழி நிலம் இத்திருவிழா நடத்த தானமாக தரப்பட்டுள்ளது.

   
இந்த திருவிழா தடையில்லாமல் நடத்தும் பொறுப்பை இக்கோயிலில் பூசை செய்து வந்த

 
சிவப்பிராமணன் காசிபகோத்திர நீறணிந்தான் காழிப்பிள்ளை மற்றும் அவரது சகோதரர்களிடம்

 
ஒப்படைத்து உள்ளனர். இது மட்டுமன்றி இக்கோயிலில் தடையின்றி பூசைகளும் திருவிழாவும்

 
நடக்க 4 வேலி (எட்டாயிரம் குழி) புன்செய் நிலமுன் தானமாக தரப்பட்டுள்ளது.

   
இவ்வூருக்கு அருகேயுள்ள வரஞ்சிரம் என்ற ஊரில் உள்ள வரஞ்சிரமுடைய நாயனார் என்ற

 
கோயிலுக்கு அம்மாவாசை பூசை செய்ய ஏற்கனவே நிலம் தானமாக தரப்பட்டு இருந்தது. அந்த

 
நிலத்தில் வரும் விளைச்சலில் இருந்தும்,வரஞ்சிரமுடையநாயனார் கோயிலுக்கு விடப்பட்ட

 
நன்செய் நிலத்தில் வரும் விளைச்சலில் இருந்தும் 100 குழிக்கு 16 படி நெல் கயிலாயமுடைய

 
நாயனார் கோயில் பூசைக்கும், திருவிழாவுக்கும் தரப்படவேண்டும் என கல்வெட்டு குறிப்பிடுகிறது.


 
ஊரையும், நிலங்களையும், குடிகளையும் பாதுகாக்க பாடிக்காவல் என்ற ஒரு படைப்பிரிவு அக்காலத்தில்

செயல்பட்டு
வந்துள்ளது அந்தப்படைக்கு அப்பகுதி விளைநிலங்களில் விளையும்

 
தானியங்களின் ஒரு பகுதி வரியாக தர வேண்டும். அப்படி வரியாகப்பெற்ற வரகு என்ற தானியமும்

 
இந்த திருவிழா செலவுக்காக தரப்பட்டுள்ளது.
 
  
இக்கல்வெட்டு அரசனின் நேரடி ஆணையாக வெட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் அப்போது

 
வல்லவரையன் என்ற குறுநிலமன்னனின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இந்த தானம் தொடர்ந்து

 
நிலைத்து இருக்க வேண்டும் என வல்லவரையன் மீது சத்தியம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில்

 
மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம்.


இக்கல்வெட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்திகள்

1.
கற்றளியாக இல்லாமல் செங்கல் தளியாக உள்ள கோயில்களில், அல்லது கற்றளியாக இருந்தும்

 
புதிய கல்வெட்டுகளை பொறிக்க இடம் இல்லாத போதும், புதிய கல்வெட்டுகளை பொறிக்க

 
வேண்டிய அவசியம் ஏற்படும் போது, ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு

 
கோயிலின் உள்ளே ஒரு இடத்தில் நட்டு வைக்கப்பட்டன.

2.
மூன்றாம் குலோத்துங்கசோழன் வீரராசேந்திரன் என இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.

3.
தற்போது நாகலூர் என குறிப்பிடப்படும் இந்த ஊர் கல்வெட்டில் நாவலூர் என குறிப்பிடப்படுகிறது.

4.
நாகலூர் சோழர் காலத்தில் மிலாடுடைய ஜனநாத வளநாட்டு பரனூர் கூற்றம் என்ற பிரிவில்

 
அமைந்திருந்தது.. மிலாடு என்பது திருக்கோயிலூர் பகுதியை குறிப்பதாகும்

5. .
இக்கோயிலை கயிலாயமுடைய நாயனார் கோயில் என கல்வெட்டு குறிப்பிடுகிறது.

6.
துறையுடையான் நந்திபந்மன் என்பவர் இக்கோயிலுக்கு பூசை செய்ய நிலதானம் அளித்ததையும்

 
புதிதாக ஒரு திருவிழாவை ஏற்படுத்தி அதற்க்கும் நிலதானம் செய்ததையும் அறிய முடிகிறது.

7.
அக்காலத்தில் நடைமுறையில் இருந்த நில அளவுகளையும் அறிய முடிகிறது. நிலங்கள் மா,

 
வேலி என்ற அளவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இன்றைய கணக்கில் ஒரு மா  என்பது 100 குழி, ஒரு

வேலி என்பது 2000(இரண்டாயிரம்) குழி நிலம் ஆகும்.

8.
தானியங்களை அளக்க பதக்கு என்ற அளவு முறை அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது

.
இன்றய கணக்குப்படி ஒரு பதக்கு என்பது 16 படியை குறிக்கும்.

9.
திருவரஞ்சரத்தில் உள்ள வரஞ்சரமுடைய நாயனாருக்கு அம்மாவசையன்று சிறப்பு பூசை

 
நடைபெற்றது, அதற்காக தனியாக நிலத்தானமும் செய்யப்பட்டுள்ளது.

10.
பாடிக்காவல் என்ற ஒரு காவல்முறை அமைப்பு ஒன்று இருந்ததையும் அதற்கு வரியாக

 
தானியங்களையும் மக்கள் செலுத்தியதை அறிய முடிகிறது.

11.
கயிலாயமுடைய நாயனார் கோயிலில் பூசை செய்யும் உரிமை காசிபன் நீறணிஞ்சான் ஸ்ரீ

 
காழிப்பிள்ளை என்பவரின் குடும்பத்துக்கு உரிமையானதாக இருந்தது.

12.
இது அரசரின் நேரிடை ஆணையாக அமைந்துள்ளது.

13.
இக்கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் வல்லவரையன் என்பவர் இப்பகுதிக்கு அதிகாரியாக

 
இருந்துள்ளார். இவர் மூன்றாம் குலோத்துங்கனின் கீழ் மகதை நாட்டை ஆண்ட பொன்பரப்பின

 
வாணகோவரையனின் கீழ் இப்பகுதியின் பொறுப்பாளராக இருந்திருக்கலாம்.

                                   




நாகலூர் செக்குகல்வெட்டு    

இப்ப 50 வயசுக்கு மேல் இருக்குறவங்க கிராமத்தில் வசிச்சிருந்தா இந்த விசயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.ஊருக்குள்ள செக்குமேடுன்னு ஒரு இடம் இருக்கும். அங்கு நெறைய செக்குகள் சுத்திட்டு இருக்கும் மாடுகள் அந்த செக்கை சுத்த வச்சிட்டு இருக்கும். எள்,தேங்காய், வேர்கடலை,ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை அந்த செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்திட்டு இருப்பாங்க.

     இப்போதைய காலகட்டத்தில் மின்சாரத்தில் ஓடும் செக்குகள் வந்துவிட்டன. நம்ம மக்களும் இப்ப செக்கு எண்ணெயை விரும்பி வாங்க ஆரம்பிச்சிட்டாங்க.ஆனா ஆயிரம் வருசம் முன்னாடி மக்களின் எண்ணெய் தேவை எப்படி தீர்த்து வைக்கப்பட்டதுன்னு யோசிச்சு இருக்கீங்களா..?

   மின்சாரம் இல்லாத அந்த காலத்தில் உணவு சமைக்க மட்டுமல்லாது, இருளை நீக்கி ஒளியை பெறவும் எண்ணெயின் தேவை ரொம்ப முக்கியமா இருந்திருக்கு.இப்ப இருப்பது போல அப்பவும் அரசு இருந்தது. மன்னராட்சியில் அந்த செக்குக்கு வரியும் விதிக்கப்பட்டது.

   செக்கு சொந்தமா வச்சிருக்கவங்க சமூகத்தில் உயர்ந்த பொறுப்பிலும், அந்தஸ்திலும் இருந்தாங்க. கோயில்களில் விளக்கெரிக்கவும் எண்ணெயின் தேவை முக்கியமா இருந்தது.

   அதனால் ஒவ்வொரு ஊரிலும் கல்செக்கின் பயன்பாடு ரொம்ப முக்கியமா இருந்திச்சி.சிலர் அப்படி கல்செக்கை செய்து ஊருக்கு தானமாகவும் கொடுத்தாங்க.

அப்படி 1200 வருடங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த ஒரு கல்செக்கை பத்திதான் இப்ப பார்க்கப்போறோம்.

கொரானாவுக்கு முன் கல்வெட்டுகளை தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது ரெட்டாக்குறிச்சி என்ற ஊரில் பழமையான கோயில் ஒன்று இருப்பதாக கேள்விப்பட்டு நானும் வீரராகவன் சாரும் அங்கு ஆய்வுக்கு சென்றோம்.அங்கு 7 கல்வெட்டுகளை கண்டு படி எடுத்து படித்தோம்.அப்போது அருகே வரஞ்சரம் என்ற ஊரில் பழமையான கோயில் ஒன்று உண்டு என ஊர்காரர்கள் சொன்னார்கள்.அங்கு சென்று ஆய்வு செய்தபோது பழமையான லகுலீசர் சிற்பம் ஒன்றை கண்டறிந்தோம்
.
  அங்கிருந்து ஊருக்கு திரும்பும் வழியில் ஒரு சிறிய கோயில் ஒன்றை கண்டோம்.உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பலகைக்கல்லில் ஒரு கல்வெட்டு இருப்பதை கண்டோம்.அக்கல்வெட்டையும் படி எடுத்து படித்து மூன்று மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டோம்.
 
.
    கொரானாவால் அப்போது செய்தி கொடுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் தான் அக்கல்வெட்டை பத்திரிக்கை செய்தியாக கொடுத்தோம்.
  சில நாட்களுக்கு முன் வழக்கம் போல் வாட்சப் பார்த்துக்கொண்டிருந்தேன்.அப்போது சதீஷ் என்ற நண்பர் ஒரு செய்தியும் படமும் அனுப்பி இருந்தார்.

 சார், இதை படித்து தர முடியுமா? எங்க உறவினர் வீட்டுக்கு பக்கத்தில் இந்த உரல் இருக்கு. என்னமோ எழுதியிருக்கு என்னன்னு தெரியல

செய்தியை படித்து படத்தை பார்த்தவுடன் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் ஓர் உணர்வு.ஒரு வரியில் அழகா கல்வெட்டு வெட்டப்பட்டிருந்தது.

உடனே கால் பரபரத்தது. உடனே அங்க போய் ஆகணுமே..

வீரராகவன் சாருக்கு போன் செய்தேன்

சார் ஒரு செக்கு கல்வெட்டு இருக்கு இன்னிக்கி வர முடியுமா..?

தோ..உடனே கிளம்பிட்டேன். இன்னும் 2 மணி நேரத்தில் அங்க இருப்பேன்.

நாகலூரை சேர்ந்த தமிழரசன் என்ற நண்பரின் தொடர்பும் கிடைத்தது. அவர் சென்னையில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவர் மூலம் ஊரில் உள்ள நண்பர்களை எங்களுக்கு துணையாக இருக்க ஏற்பாடு செய்தார்.

 நான் வண்டியில் கிளம்பி கள்ளக்குறிச்சி சென்றேன். வீரராகவன் சாரும் அங்கு வந்துவிட்டார். கள்ளக்குறிச்சியில் வசிக்கும் அன்புத்தங்கை சங்கீதாவும் எங்களுடன் இணைந்து கொண்டார். மூவரும் கிளம்பி நாகலூர் சென்றோம்.

  ஊர்மக்கள் மிக்க ஆர்வத்துடன் தங்கள் வரலாற்றை கேட்டு தெரிந்து கொண்டனர்.

அன்று ஆய்வு செய்யப்பட்ட மூன்று கல்வெட்டுகளும் கொற்றவை இணையதளம்,நக்கீரன் இணையதளம், தீக்கதிர் இணையதளம் மற்றும் செய்தித்தாளில் செய்தியாக வந்துள்ளது. அந்த செய்தி உங்களுக்காக

                                       

கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழமையான

 செக்குகல்வெட்டு கண்டெடுப்பு


 சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், சங்கீதா ஆகியோர் தமிழரசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நாகலூரில் கல்வெட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1200 ஆண்டு பழமையான செக்குகல்வெட்டு,1080 ஆண்டுகள் பழமையான சோழர்கால கல்வெட்டு மற்றும் 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

செக்கு கல்வெட்டு

    பழங்காலத்தில் மின்சாரம் இல்லாதபோது வெளிச்சத்துக்கு விளக்குகளை எரியவிடவும் , சமையலுக்கும் எண்ணெயின் தேவை மிக முக்கியமாக இருந்துள்ளது. எண்ணெய் எடுக்க கல்லால் ஆன சிறு உரல் போன்ற கல்செக்குகள் பயன்படுத்தப்பட்டன. இவை கோயில் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென செய்து தானமாக தரப்பட்டன.செக்கில் எண்ணை ஆட்டுபவர்கள் செக்குக்கு கூலியாக ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெயை கோயிலுக்கோ, அரசுக்கோ செலுத்தினர்.

   குறுநிலத்தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் போன்றோர் இது போன்ற கல்செக்கை உருவாக்கி தானமாக கொடுத்தனர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நலம் பெறவும் வேண்டுதலின் பேரில் இத்தகைய செக்குகள் தானமாக தரப்பட்டன.இப்படி தானமாக தரும்போது அதை செய்து கொடுப்பவர் தன் ஊர், தந்தை பெயருடன் தன் பெயரையும் கல்வெட்டாய் அந்த கல்செக்கில் பொறித்து தரும் வழக்கமும் இருந்துள்ளது.

                                         




நாகலூர் செக்குகல்வெட்டு

 நாகலூரில் மாரியம்மன் கோயில் தெருவில் சாலையில் ஓரத்தில் இருந்த ஒரு கல்செக்கு ஆய்வு செய்யப்பட்டது. கிழக்குப்புறம் சாய்ந்த நிலையில் புதையுண்ட நிலையில் கல்செக்கு காணப்பட்டது. இதன் வெளிவிளிம்பு விட்டம் 67 செ.மீ, உள் விளிம்பு 54 செ.மீ, நடுவில் உள்ள குழியின் ஆழம் 32 செ.மீ ஆகவும் உள்ளது. உரலின் மையப்பகுதியில் ஒரு வரியில் கல்வெட்டு வளைவாக வெட்டப்பட்டுள்ளது. எழுத்தமைதியைக்கொண்டு இது பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம்.1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு இதுவாகும். கல்வெட்டானது தமிழ் மற்றும் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது.
  ஸ்ரீ என்ற எழுத்துடன் கல்வெட்டு துவங்குகிறது.

  ‘ ஸ்ரீ குந்தை காடன்முரி செய்வித்தது:

என கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. இதில் குந்தை என்பது அவர் தந்தையின் பெயரையும் காடன்முரி என்பது கல்செக்கை தானம் கொடுத்தவரின் பெயராகவும் கருதலாம்.ஸ்ரீகுந்தை காடன்முரி என்பவர் இந்த கல்செக்கை செய்து தந்துள்ளார் என்பது இதன் பொருளாகும்.செய்வித்தது என்ற சொல்லில் வரும் ய் என்ற யகரம் இக்கல்வெட்டில் வித்தியாசமாக வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

                 



முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு

நாகலூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் கருவறையில் பெருமாள் சிலைக்கு முன் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் 14 வரிகளில் கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் 5 வரிகள் மட்டுமே படிக்கும் நிலையில் உள்ளது.இக்கல்வெட்டின் நீளம் 88 செ.மீ,அகலம் 64 செ.மீ ஆகும். இது 1080 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதலாம் பராந்தகசோழனின் முப்பத்திமூன்றாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். கி.பி 940 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மருக்கு என்ற முதலாம் பராந்தக சோழனின் மெய்கீர்த்தியோடு கல்வெட்டு துவங்குகிறது

                     



இப்போது நாகலூர் என்று அழைக்கப்படும் இவ்வூர் கல்வெட்டில் நாவலூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாவல் மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் நாவலூர் என்று பெயர் அமைந்திருக்கலாம்.17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும் நாவலூர் என்றே குறிப்பிடுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்புதான் நாவலூர் என்ற பெயர் நாகலூர் என மருவி உள்ளது.அக்காலத்தில் பரனூர் கூற்றத்தில் நாவலூர் இருந்துள்ளது.

தொண்டைமான் கல்வெட்டு

                                  



நாகலூர் வரதராஜபெருமாள் கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் தெற்குபக்க சுவரில் 5 வரிகளில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.எழுத்தமைதியை கொண்டு இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.இந்த கல்வெட்டிலும் இந்த ஊர் நாவலூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்ததாண்டயத்தொண்டைமான் என்பவர் இந்த பெருமாள் கோயிலுக்கு ஆயிரம் குழி நஞ்சை நிலத்தை சர்வமாநியமாக தானம் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சந்திரன் உள்ளவரை இந்த தானம் நிலைத்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
  மிகப்பழமை வாய்ந்த செக்குக்கல்வெட்டை பாதுகாக்க அரசு முயற்சி எடுக்கவேண்டும்.

                                        


ஆறகளூர் பொன்.வெங்கடேசன்
3/10/2021

பத்திரிக்கை செய்திகள் மற்றும் இணைப்புகள்

            







                

 

 யூடியூப் லிங்

https://www.youtube.com/watch?v=ssRG0ZQHfSc


https://www.youtube.com/watch?v=DbUZ-jEf97U


https://www.youtube.com/watch?v=2fxs0jVRk18

          https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2021/jul/16/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3661568.html

தினமணி இணைப்பு

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=690831

தினகரன் இணைப்பு

நக்கீரன் இணைப்பு

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/discovery-chola-period-inscription-830-years-ago

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/1200-year-old-stone-discovery

தீக்கதிர்

https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/discovery-near-forgery