செவ்வாய், 11 ஜூலை, 2017

தியாகனூர் கல்வெட்டுக்கள்





தலைவாசல் அருகே 5 புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.மருத்துவர் பொன்னம்பலம்,கலைச்செல்வன்,பெருமாள்,சீனிவாசன்,ஜீவநாராயணன்,பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூரில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்குள்ள மலை மண்டல பெருமாள் கோயிலில் 5 புதிய கல்வெட்டுக்களை கண்டுபிடித்தனர். இவை 13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தை சேர்ந்ததாகும்.
13 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரின் ஒரு பகுதியாகவே தியாகனூர் இருந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே தியாகனூர் என பெயர் பெற்றது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோயிலை ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயில் என்றே குறிப்பிடுகின்றன. 12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூரை தலை நகராக கொண்டு வாணகோவரையர்கள் மகதை மண்டலத்தை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் காலத்தில் செய்யப்பட்ட தமிழகத்திலே மிக்கப்பெரிய இரண்டு புத்தர் சிலைகள் தியாகனூரில் உள்ளன.
கல்வெட்டு செய்தி;
இக்கோயிலின் வடக்கு சுவரில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வாணகோவரையரின் கல்வெட்டு காணப்படுகிறது. ஆறகழூர் மலைமண்டல பெருமாள் ஆராதனைக்கும், திருப்பணிக்கும், முதலீடாக மகதை மண்டலத்தை சேர்ந்த தொழுதூரில் ஆயிரம் குழி நன்செய் நிலம் தானமாக தரப்பட்டுள்ளது. இந்நிலத்தை முதலீடாக கொண்டு அந்நிலங்களில் வரும் விளைச்சல், பொன் வரி, நிலவரி உட்பட அனைத்து ஆதாயங்களையும் கொண்டு மலை மண்டல பெருமாளுக்கு பூசையும் திருப்பணியும் செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த செய்தி கல்வெட்டாகவும் செப்பு பட்டயமாகவும் வெளியிடவும் வாணகோவரையன் ஆணை பிறப்பித்துள்ளார்.
இக்கோயிலின் வடக்கு அர்த்தமண்டபம் கருவறை நாளம் முதல் அதிட்டானம் வரை 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழமன்னன் மூன்றாம் இராசேந்திரனின் கல்வெட்டு காணப்படுகிறது. இதில் உள்ள செய்தி என்னவென்றால் வாணகோவரையனின் ஆணைப்படி ஆத்தூர் பழம் பற்றில் இருந்த கல்பூண்டி என்ற ஊர் ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கு தானமாக விட்ட ஊராக இருந்துள்ளது. அப்போது அது நடைமுறையில் இல்லாத காரணத்தால் மீண்டும் கல்பூண்டி என்ற ஊரின் நான்கு எல்லைகளையும் அளந்து அங்குள்ள நன்செய் ,புன் செய் நிலங்களை மீண்டும் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கு தானமாக கொடுத்ததை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது.குடி நீங்கா திருவிடையாட்டமாக இதை இராமசந்திர தேவர், மாகாயன் பேராயன்,திருவேங்கடன் ஆகிய மூவர் எழுதிக்கொடுத்துள்ளனர். இவர்களில் திருவேங்கடன் பரம்பரையினர் இன்றும் ஆறகழூரில் வசித்து வருகின்றனர்.
இக்கோயிலின் கருவறை மேற்கு அதிட்டானத்தில் 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. அதில் ஆறகழூர் மலைமண்டல பெருமாள் கோயிலுக்கும் அங்கு பணிபுரியும் நம்பிமார்க்கும், வைஷ்ணவ கண்காணிகளுக்கும் கல்லக்குறிச்சி வட்டத்தில் உள்ள பிள்ளை ஏந்தல் என்ற இடத்தில் ஆயிரம் குழி நன்செய் நிலம் திருநாமத்து காணியாக தானமாக தரப்பட்டுள்ளது. இச்செய்தி கல்வெட்டாகவும், செப்பேடாகவும் வெட்டப்பட்டதாய் இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.
இக்கோயிலின் தென்புறம் உள்ள சுவரில் கி.பி. 1469 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று காண கிடைக்கிறது. விசய நகரபேரரசு காலத்தில் நரசிங்கராய உடையார், ஈஸ்வர நாயனார் என்பவவர்களால் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. 7 வரிகளில் கல்வெட்டு உள்ளது.
ஆத்தூர் கூற்றம் ஆறகழூர் மலைமண்டலபெருமாள் கோயிலை புதுப்பித்து தியாகசமுத்திரம் என்ற ஏரியை வெட்டி ஆறகழூரில் இருந்த கைக்கோளர்களையும் ,தேவரடியார்களையும் இங்கு குடி அமர்த்தி அவர்களுக்கு கல்லக்குறிச்சி பற்று ராயப்ப நல்லூரில் நன்செய்,புன்செய் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம்,இருஞ்சிபுரம்,தேவதானபுரம், திருக்கோயிலூர் போன்ற பகுதிகளில் இருந்து கைக்கோளர்களும், தேவரடியார்களும் வரவழைக்கப்பட்டு இங்கு குடி அமர்த்தப்பட்டனர்.அவர்களுக்கு நிலங்களும் தறிகளும் அளிக்கப்பட்டன. கைக்கோளர்கள் இக்கோயிலுக்கு திருமெய்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.இந்த தர்மத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தையும்,தன் தாய் தந்தையை தன் கையாலே கொன்ற பாவத்தையும் அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தியாகன நாயக்கர் என்பவர் இந்த பகுதிக்கு பொறுப்பாளராக இருந்துள்ளார், ஏரியை வெட்டி, கோயிலை புதுப்பித்து புதிய குடிமக்களையும் இங்கு குடி அமர்த்தியதால் அவர் பெயரில் தியாகனூர் என்று ஊர் பெயர் உருவாகியிருக்க கூடும்.
இக்கோயிலின் கருவறை மேற்கு விருத்த குமுதத்தில் கி.பி. 1503 ஆம் ஆண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால கல்வெட்டு காணப்படுகிறது.
ஆற்றூர் கூற்றம் தியாகசமுத்திரம் மலைமண்டல பெருமாள் கோயிலில் பணிபுரிந்த வென்று மாலையிட்ட பெருமான் திருமலை அப்பன், வேங்கடத்துறைவார் பூதன் சறுக்காயர், ஆழ்வார் பூதான கரியவர், என்ற மூன்று பேருக்கு கல்லக்குறிச்சி வட்டம் நாரியப்பனூருக்கு மேற்கே ஏரியின் கீழ் நன்செய் நிலம் 1500 குழி நிலம் சர்வமானிய இறையிலியாக கொடுத்ததை இந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.
இக்கோயிலின் நுழைவாயிலின் அருகே 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்செட்டு ஒன்று பலகை கல்லில் நான்கு புறமும் வெட்டப்பட்டுள்ளது.
மகதை மண்டலத்து ஆற்றூர் கூற்றத்தில் உள்ள பெரியேரி என்னும் ஊரில் பெரியபெருமான் என்னும் பெருமாள் கோயிலையும் மடையையும் கட்டுவித்து அக்கோயிலுக்கு பூசை செய்யவும், பூஜைக்கு எண்ணெய் மற்றும் இசைக்கருவிகள் இசைக்கவும்,சங்கு,சேமக்கலம்,சேகண்டி இசைப்பவர்களுக்கும் ஏரிக்கு அருகே நிலதானம் செய்ததை இந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. சூரியன் சந்திரன் உள்ளவரை இந்த தானத்தை காப்பாற்ற வேண்டும் எனவும், இந்த தானத்துக்கு அழிவு செய்பவர்கள் பாவத்தில் போவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி கல்வெட்டாகவும் செப்பேடாகவும் பதிவு செய்யப்பட்டதாய் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது இந்தபகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் சரித்திர சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினார்கள்
cell no-9047514844,




http://m.tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article9757164.ece

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/DINAMALAR/2017/07/10/ArticleHtmls/10072017011008.shtml?Mode=1


http://www.dinamalar.com/news_detail.asp?id=1808430



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக