ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

ஆறகழூரில் சித்திரமேழி வணிககுழு கல்வெட்டு.....

ஆறகழூரில் சித்திரமேழி வணிககுழு கல்வெட்டு


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் சித்திரமேழி வணிககுழு கல்வெட்டு.....
ஓராண்டுக்கு முன் என்னவென்றே தெரியாமல் இந்த கல்வெட்டை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டேன்....
பேராசிரியர் கல்வெட்டு ஆய்வாளர் திரு இராஜகோபால் அய்யா அவர்கள் இதை சித்திரமேழி வணிக குழு கல்வெட்டு என உறுதி செய்துள்ளார்.....
வணிக குழு கல்வெட்டு என்றால் என்ன..?(தெரியாதவர்களுக்காக)

--------------------------------------------------
இடைக்கால தென்னிந்தியாவில் பல்வேறு தொழிற்குழுக்கள் செயல்பட்டுள்ளன. நிகமா, புகா, சிரேணி, சங்கம் ஆகிய தொழிற்குழுக்கள் வட இந்தியாவில் செயல்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் நாநாதேசி, ஐநூற்றுவர், வளஞ்சியர் (தற்கால பலிஜர்) கவரை, மாயிலட்டி, சித்திரமேழி, கம்மாளர், அக்கசாலை (பொற்கொல்லர்), இடங்கை, வலங்கை, தேசி, சாத்து முதலிய வணிகச் சங்கங்கள் செயல்பட்டுள்ளன. சாலியர் என்ற பட்டு வணிகர்கள், நாட்டுச்செட்டி போன்றோர் தங்களுக்கென ஒரு வணிகக் குழுவை வைத்திருந்தனர். தருமபுரி மாவட்டத்தில் வளஞ்சியர், திருப்பத்தூர் பகுதியில் ஐநூற்றுவர் ஆகிய வணிகப் பிரிவினர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகின்றனர். கி.பி. 8 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் குழுக்களைப் பற்றிய கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவை ஏராளமாகக் கிடைக்கின்றன.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பிரான்மலை (இராமநாதபுரம் மாவட்டம்), சர்க்கார் பெரியபாளையம், கொங்குநாட்டான் புதூர் (பொள்ளாச்சி) ஆகிய ஊர்களில் தென்னிந்தியா முழுவதும் இருந்து வந்த வணிகக் குழுவினர் வெட்டி வைத்த கல்வெட்டுகள் உள்ளன.
சித்திரமேழி பெரிய நாட்டார் சிற்பம். மேழி என்பது கலப்பையைக் குறிக்கும். சித்திரமேழி = அழகிய கலப்பை. நாட்டார் என்னும் உழவர் குடியினர் பலர் தங்களுக்குள் ஒரு குழும அமைப்பை ஏற்படுத்தி அதை பெரிய நாடு, பேரிளமை நாடு என்ற பெயரில் முன்னிருத்தினர். இது 11ஆம் நூ.ஆ அளவில் தொடங்கியது. பின்னர் வணிகர் ,கம்மாளர்களும் இதனில் இணைந்தனர். இவர்கள் தங்களைப் பூமி புத்திரர் என்று அழைத்துக் கொண்டனர். சித்திரமேழியைத்ம் தெய்வமாகவும் கொண்டு வழிபட்டனர்.இச்சிற்பத்தில் பூதேவி சாமரங்கள் இடையே காட்டப்பட்டு கண்ணாடி,கலப்பை,மேழி,குத்துவிளக்குகள்,சம்மட்டி, சுத்தியல்,குறடு , முக்கலி மீது பூர்ண கும்பம் ஆகியவையும் உள்ளன. கும்பத்திலிருந்து வெளிவரும் தெய்வம் ஆய்வு செய்யப்படவேண்டும்
தென்னிந்திய வணிக குழுக்கள் மட்டுமே அரசர்களைப்போல தனக்கென ஒரு படையை வைத்துக்கொள்ளவும், தனியாக கல்வெட்டுக்கள் பொறித்துக்கொள்ளவும் அதிகாரம் பெற்றிருந்தனர்
           இக்கல்வெட்டை பொறித்த சித்திரமேழி வணிகக் குழுவினர், கி.பி., 11 முதல் கி.பி., 13 வரை புகழ் பெற்று விளங்கினர். எட்டு திசைகளிலும் வணிகம் செய்த குழு, அரசர்களுக்கு இணையாக ஊர் பஞ்சாயத்து செய்யவும், கல்வெட்டு பொறிக்கவும் உரிமை பெற்றிருந்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக